ஒரு ’தட்டை’யான கதை
ஒரு ’தட்டை’யான கதை
இதுநாள் வரையில் அவளுக்கு இது
தோன்றியதே இல்லை. இன்று பி.டி. ரூம்மில் நீச்சல் வகுப்பிற்காக
மற்ற மாணவிகளுடன் உடை மாற்றும்போது தான் அதை கவனிக்கிறாள். அவளது வகுப்பில் படிக்கும் சில மாணவிகள் ’பிரா’ அணியத் தொடங்கி இருந்தனர். இத்தனை நாள் வரை அவர்களும் இவளைப் போல் தான், வெறும் சட்டையும் பின்னோ-பார்மும் அணிந்து வருவர். திடிரென்று ஒருநாள் மூன்று, நான்கு மாணவிகள் பிரா அணிந்திருந்ததை பார்த்ததும் சற்றுக்
குழம்பிவிட்டாள். அவர்களிடம், இது என்ன? எதற்கு? என்றுக் கேட்டதற்கு, ”அதெல்லாம் தெர்லப்பா; எங்கம்மா போட்டு போக சொன்னாங்க” என்றவாறு சென்றுவிட்டனர். மாலை வீட்டிற்கு சென்றவுடன் அம்மாவிடம் கேட்க வேண்டும்
என்றெண்ணியவாறே நீந்த தொடங்கினாள்.
மாலை வீட்டிற்கு வந்ததும்
வராததுமாக பின்வாசலில் இருந்த தன் அம்மாவிடம் சென்று,
”ம்ம்மா..எங்கிளாஸ்ல எல்லா பிள்ளைங்களும் அது
போட்ருக்காங்க; நானும் போடணும்மா”.
”என்னடி வந்தவுடன உளறிகிட்டு இருக்க?”
”ப்ச், அதும்மா” என்று கொடியில் கிடந்த அவளது அம்மாவின் பிராவை காட்டினாள்.
வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு, ”ஆறாங்கிளாஸ் படிக்கிற பிள்ளைக்கு எதுக்குடி இது? இன்னும் கொஞ்சம் வளர்ந்த அப்பறம் போட்டுக்கலாம்” என்று சென்றுவிட்டாள்.
அவளுக்கு அந்த பதில் திருப்தியாக
இல்லை. ”மத்த பிள்ளைங்கலாம்
போட்ருக்கும்போது நம்ம மட்டும் ஏன் போடக்கூடாது”?, யோசித்துக்கொண்டே
இருந்தாள். நச்சரிப்பு தாங்காமல் அவளது
தம்பியின் பனியனைக் கொடுத்து, ”இப்ப இதப் போட்டுக்க அப்பறமா அம்மா
அது வாங்கி தர்றேன்” என்று அவளது அம்மா கொடுத்துச் சென்றாள். அந்த அம்மா தன் மகளுக்கு அது என்னவென்றோ, அது எதுக்கென்றோ விளக்க முற்படவில்லை. அப்போது அவள் அறிந்திருக்கவில்லை அது எத்துனை பெரிய
பின்விளைவை உண்டாக்க இருக்கிறதென்று.
ஒன்பதாம் வகுப்பில், வசதியின்மை காரணமாக அரசு பள்ளியில் சேர்க்கப்பட்டாள். நாட்கள் சென்றது. அவளது வகுப்பில் அனைவருமே பிரா அணியத் தொடங்கி இருந்தனர். ஒருநாள், வயிறு வலிக்கிறது என்று உட்கார்ந்துவிட்டாள். ஆம், பெரிய மனுஷியாகிவிட்டாள். ரத்தத்தை பார்த்து பயந்தவளை அவளது ஆசிரியை தேற்றி அவளது
அம்மாவுடன் அனுப்பி வைத்தார். பெரிய அளவில் இல்லாமல் சுருக்கமாக
சடங்கு வைப்பதென்று முடிவு செய்யப்பட்டது. அவளது அத்தைமார்கள் சடங்குக்கு
தேவையான துணிமணி எடுத்து வந்திருந்தனர். ஆவலுடன் அதை பார்த்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
“என்ன அத்த, பிரா வாங்கலயா”?? என்று ஏமாற்றத்துடன் கேட்டாள்.
”உனக்கு இப்ப அங்க என்ன இருக்கு-னு அத போடணுங்கற?” என்று அந்த அத்தை சென்றுவிட்டாள். அருவியாய் வந்த அழுகையை சிரமப்பட்டு அடக்கிக்கொண்டாள்.
கடைசி வரை நம்ம பிரா போடவே
முடியாதா என்ற எண்ணம் அவளுக்கு தோன்ற ஆரம்பித்தது. மற்ற பிள்ளைகளை எல்லாம், ”மாரு பூமியாத்தா மேல படக்கூடாது; குப்புறப்படுக்காதிக பயவுள்ளைகளா” என்று வையும் அப்பத்தா இவளை மட்டும் எதுவுமே சொல்வதில்லை.
வயது ஏறிக்கொண்டே சென்றது. ஆனால், மார்பில் மட்டும் வளர்ச்சியே இல்லை. பட்டும் படாமலும் தனது மருமகளிடம் கேட்கத்தான் செய்தாள்
அந்தக் கிழவி. அதற்கு ”எல்லாம் தன்னால நடக்கும், பேசாம இருங்க” என்று வாயை அடைத்துவிட்டாள்.
ஒன்பது, பத்து வகுப்புகளிலையே உடன் படிக்கும் மாணவிகளெல்லாம்
கொப்பும் கொலையுமாக மாறத்தொடங்கி இருந்தனர். இவள் மட்டும் அப்படியே இருந்தாள். மற்ற மாணவிகள் வரும்போதும் போகும்போதும் ஒரு மாணவர் கூட்டம்
பின்தொடர்ந்து செல்லும்; ஆனால் இவள் மட்டும் தனியாகவே
நடந்து செல்வாள். மற்ற மாணவிகளை, ”ரெண்டு இட்லி போகுதுடா, வேணுமா?” என்று உடன் படிக்கும் மாணவர்கள்
எல்லாம் கேட்கும்போது நம்மையும் யாராவது இப்படி கேலி செய்யமாட்டார்களா என்று
உள்ளுக்குள் குமைந்துக் கொள்வாள்.
இவளுக்கும் கேலிப்பேச்சுகளும், கிண்டல்களும் நிரம்பவே கிடைத்தன. ஆனால், அவையெல்லாம் “அயர்ன் பாக்ஸ் போகுதுடா; கொட்டாங்குச்சி வேணுமா” போன்றே இருந்தன. இந்த கேலிப்பேச்சு பேசுபவர்கள் தன் உடன் படிக்கும் பெண்களும் தான் என்பதுதான்
அவளை இன்னும் வேதனைக்கொள்ள செய்தது.
ஒவ்வொரு முறையும் தனது அம்மாவிடம்
இதுகுறித்து கேட்க நினைப்பாள். ஆனால், அவளது அம்மா அதற்கான இடத்தை அவளுக்கு அளிக்கவே இல்லை. அவளுக்கு தினமும் வயிற்றுப்பாட்டை கழிப்பதே பெரும்பாடாக
இருந்தது. யாரிடம் கேட்பது, என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தாள். அவளால் இயன்றதெல்லாம், தினமும் குளிக்கையில் தனது மார்பை
வகைத்தொகை பாராமல் பிடித்து கசக்குவதுதான். அவளது ஒரு அரைக்குறைத் தோழி கொடுத்த ஐடியா அது. பாவம், அதனால் மிஞ்சியது வலி மட்டும்தான்.
தீபாவளி முடிந்த அடுத்த நாள்
பள்ளியில் அனைவரும் அவரவர் வீட்டில் செய்த பண்டங்களை கொண்டுவந்து
பகிர்ந்துக்கொண்டனர். இவளும் இவள் பங்குக்கு கொண்டு
சென்றிருந்தாள். அருகில் இருந்த ஒரு மாணவ
கூட்டத்துக்கு ”இந்தாங்க தட்டை” என்று டிபன் பாக்ஸை நீட்ட; அதற்குள் ஒருவன், “பார்றா ஒரு தட்டையே தட்டை கொடுக்கிறதே; ஆச்ச்ரியக்குறி” என்று சொல்லவும் வகுப்பு முழுக்க ஓஓஓவென்று சத்தம். இவள் அழுதுக்கொண்டே வீட்டிற்கு வந்துவிட்டாள். மதியத்தில் இருந்து இரவு வரை அழுதுக்கொண்டே இருந்தாள். மனதிற்குள் எண்ணங்கள் கடலலையாய் சீறின. ஒரு முடிவுக்கு வந்தவளாய் கிளம்பிவிட்டாள்.
மெட்ராஸுக்கு போவதாய் முடிவு. அவளது சிநேகிதி ஒருமுறை சொல்லியிருக்கிறாள், அங்கு இதற்கெல்லாம் நல்ல சிகிச்சை கிடைக்குமென்று. கையில் கிடைத்ததை எடுத்துக்கொண்டு யாரிடமும் சொல்லாமல்
கொள்ளாமல் பஸ் ஏறி கோயம்பேடு வந்து இறங்கிவிட்டாள்.
அதிகாலை 3 மணி; பேருந்து நிலையம் வெறிச்சோடி
கிடக்கிறது. எங்கு செல்ல வேண்டும், யாரை பார்க்க வேண்டும் எதுவும் தெரியவில்லை. அந்த ஊரில் இருக்கக்கூடாது; அந்த பள்ளியில் படிக்கக்கூடாது என்ற ஒரு எண்ணம் மட்டும்தான்
அவளை இங்குக் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது. ஆனால், இப்போது தோன்றுகிறது ”அவசரப்பட்டு வந்திருக்க வேண்டாமோ?” என்று. அவளது அம்மா அங்கு இப்போது என்ன
செய்துக்கொண்டிருப்பாள்? ஊரைக் கூட்டி ஒப்பாரி வைத்துக்
கொண்டிருப்பாளோ? அல்லது ”போயி தொலஞ்சது சனியன் என்று தலைமுழுகி விடுவாளோ” என்று யோசித்தவளாய் கால் போன திசையில் நடந்தாள்.
திடீரென்று தோளில் ஒரு கை
விழுகிறது. திடுக்கிட்டு திரும்புகிறாள். ஒரு அம்மா, ஒரு 4 வயது குழந்தையுடன் நின்றுக்கொண்டிருந்தாள்.
”என்னம்மா, ஊருக்கு புதுசா? நானும் பாக்குறேன் பேந்த பேந்த முழிக்கிறியே”
”ஆமாக்கா. ஆனா இங்க யாரையும் தெரியாது. ஏதோ குருட்டுத் தைரியத்துல வந்துட்டேன். இப்ப என்ன பண்றது, எங்க போறதுனு தெரியல”
அவள் சொன்ன ”ஆமாக்கா” என்ற முதல் வார்த்தையே காட்டிக்
கொடுத்துவிட்டது அவள் ஒரு கிராமத்தாள் என்று. சென்னையில் பார்த்தவுடன் எல்லாம் யாரும் உறவுமுறை கூறி
அழைக்கமாட்டார்கள். அப்படி அழைத்தால் அவர்கள்
சென்னைவாசி அல்ல.
”ஒண்ணும் பயப்படாதம்மா என் வீடு இங்கதான்; வந்து இருந்துட்டு விடிஞ்சவுடன போ” என்று அழைத்துச் சென்றாள். இவளும் வேறு வழியில்லாமல் உடன் சென்றாள்.
சிறு சிறு குச்சுகளாக வளைந்து
வளைந்து ஒரு அறைக்கு அழைத்து வந்தாள். அங்கிருந்த ஒரு பெண்ணிடம், ”இன்னிக்கு நைட்டுக்கு மட்டும் இங்க
தங்கிகட்டும். காலங்கார்த்தால எந்திச்சு போயிரும்” என்று சொல்லி சென்றாள். இவளும் அந்த பெண் காட்டிய அறைக்கு சென்று தனது கட்டைப்பையை
தலைக்கு வைத்து படுத்துக்கொண்டாள். பயணத்தின் களைப்பாலும், முதல் நாள் முழுதும் தூங்காததாலும் அசந்து உறங்கிவிட்டாள்.
காலை எழுந்துப் பார்த்தால் அருகில்
ஒரு பார்சலில் இட்லியும் வடையும் இருந்தன. பசியின் கிறக்கத்தால், யாரும் சொல்லாமல் அவளாகவே எடுத்து சாப்பிட்டாள். சாப்பிட்டுவிட்டு எழுந்து கைகழுவ வரும்போதுதான்
பார்க்கிறாள், கதவு வெளியே பூட்டப்பட்டிருக்கிறது. என்ன செய்வதென்று யோசித்தவாறே பூட்டிய கதவை
பார்த்துக்கொண்டிருந்தாள்.
திடீரென்று கதவு வேகமாய் திறக்கப்பட்டு, நேற்று வந்த அந்த இரு பெண்களும் உடன் ஒரு ஆணுமாய் உள்ளே
வந்து கதவை பூட்டிவிட்டனர். அவளை பேசவே விடவில்லை; அந்த ஆண் அவளது இரு கைகளையும் பிடித்துக்கொள்ள, ஒருத்தி அவளது உடையை களைய ஆரம்பித்தாள். இன்னொருவள் கையில் காய்ச்சிய கம்பி ஒன்றை வைத்திருந்தாள். அவளது உடைகள் முழுவதுமாய் களையப்பட்டன.
அவளை உடையின்றி பார்த்தும்,
”என்னடி ஆள் கூட்டிட்டு வந்துருக்க, இவள வச்சு நம்ம என்ன பண்ண? வெறும் வத்தலும் தொத்தலுமா இருக்கா. போ., கூட்டிட்டு போ இந்த சிறுக்கிய” என்று எரிந்து விழுந்தாள். கடுப்பில் இன்னொருவளும் அவளை இழுத்துச் செல்ல முயல, உடனே பின்னால் நின்றிருந்த அந்த ஆண், “அக்கா, இவள அனுப்ப வேணாம். சும்மா எடுபிடி வேலைக்கு வச்சுக்குவோம். எவனாது வத்தலோ தொத்தலோ ஒரு பொத்தல் இருந்தா போதும்னு வருவான்
அவன்ட்ட தள்ளி விட்ருவோம்” என்று ஐடியா கூறினான்.
அந்த விபச்சார விடுதியில்
வேலைக்காரியாக சேர்க்கப்பட்டாள். இதுதான் வேலை என்று கிடையாது; என்ன வேலை என்றாலும் செய்ய வேண்டும். மூணு வேளை சோறெல்லாம் எதிர்பார்க்க முடியாது. போட்டால் உண்டு, இல்லையென்றால் அவ்வளவுதான். அங்கும் தனது பிரச்சனைக்கு தீர்வு
கிடைக்காதா? யாரேனும் வந்து தன்னை அழைத்து
செல்ல மாட்டார்களா என்று ஏங்கி கிடந்தாள்.
ஒருநாள் ஒருவர் வந்து தனக்கு ஒரு
ஆள் வேண்டுமென கேட்க, அந்நேரம் மற்ற அனைவரும் வாடிக்கையாளர்களுடன்
இருந்தனர். வேறு வழியின்றி இவள் அனுப்பி வைக்கப்பட்டாள்.
அறையில் அவர் அமர்ந்திருந்தார். பார்த்தால் படித்தவர் போல் தெரிந்தது. சவரம் காணாத சிக்கல் தாடி, சதுர கண்ணாடி என்றிருந்தவரை பார்ப்பதற்கு 16 வயதினிலே படத்தில் ”ஹே, மயில் மயில்” என்று வரும் டாக்டரின் அன்ஷேவ்ட் வெர்ஷன் மாதிரி தோன்றியது
அவளுக்கு. முகம் வாடியிருந்தது; மனதின் வலி கண்ணின் வழி வழிந்த நீர் வழியே தெரிந்தது.
நீண்ட நேரம் அந்த அறை நிசப்தத்தில்
ஆழ்ந்திருந்தது. அவள்தான் அதை கலைத்தாள்.
”நேரமாச்சு, வீடு கூட்டி துணி துவைக்கணும்”
”ம்ம்…”
”வந்ததுல இருந்து பேசாம இருக்கீங்க?”
”என்ன பேச?”
”நீங்க எதுவும் பண்ணாம போயிட்டா இன்னிக்கு நைட்டுக்கு
சாப்பாடு தரமாட்டாங்க” என்றவளை சற்று ஆழமாக பார்த்தார்.
கண்களில் தொடங்கி தனது பார்வையை தாழ்த்திக்கொண்டே
வந்தவரின் விழிகள் அவளது மார்பை கடக்கையில் நிலைக்குத்தி நின்றது.
”உனக்கு சின்ன வயசுல இருந்தே இப்படித்தான் இருக்கா?”
”எப்படித்தான்?”
”இப்படி தட்டையா?”
”ஆமா.,”
அவளது மார்பை குறித்து அவர்
விசாரித்தது, அவளுக்கு கொஞ்சம் ஆறுதலாகவே
இருந்தது.
”சிகிச்சை எதும் எடுத்துக்கலையா?”
”பட்டணத்துக்கு வந்தா சிகிச்சை எடுத்துக்கலாம்-னு தான் ஊரைவிட்டு ஓடிவந்தேன். ஓடிவந்து, இதோ இப்ப உங்க முன்னாடி இப்படி
உட்கார்ந்து இருக்கேன், என்று தனது மார்பை தடவியவாறு
கண்ணீர் தளும்ப தன் கதையை சொல்லி முடித்தாள்.
அவரிடமும் தனது கண்ணீருக்கு ஒரு
கதை இருந்தது, ஆனால் அவருக்கு அதை இப்போது சொல்ல
வேண்டுமென்று தோணவில்லை.
”யக்கா, பேசாம வந்த வெலைக்கு தள்ளி
விட்ருவோம்; இந்த முண்டைய வச்சுகிட்டு நாம என்ன
பண்ண??”
”அதுவும் சரிதான்”.
இரண்டு பெண்களும் தங்களுக்குள்
குசுகுசுவென்று பேசிக்கொண்டனர்.
”சரிங்க சார் இட்டுனு போங்க”
அவளுக்கும் அவருடன் போக
தயக்கமில்லை. இங்கிருந்து தப்பித்தால்
போதுமென்று சென்றாள்.
”யாழினி மருத்துவமனை”யின் வாசலில் நின்ற காரில் இருந்து இறக்கி எங்கோ அழைத்து
சென்றார். அவளும் என்ன ஏதுவென்று கேட்காமல்
பின்னாலையே சென்றாள்.
”இது உங்க ஆஸ்பத்திரியா?”
”ஆமா..”
”உன்ன எதுக்கு இங்க கூட்டிட்டு வந்துருக்கேன் தெரியுமா?”
”ம்ஹூம், தெரியாது”.
”ம்ம்.. இது நான் கண்டுபிடிச்சுருக்குற ”Breast Augmneted Injection”. இதன் மூலமா மார்பில்லாத
ஒருத்தருக்கு செயற்கையா மார்பகம் உருவாக்க முடியும். இடுப்பு, தொடை பகுதியில இருக்குற தேவையற்ற
கொழுப்புகளை ஊசி மூலமா உறிஞ்சு ரெண்டு பக்க மார்புலயும் செலுத்தி மார்பகம் வரவைக்க
முடியும்”.
அவளுக்கு எதுவும் புரியவில்லை. அவன் புரிந்ததா என்று கேட்கவும் இல்லை. நாளைக்கு ஆபரேஷன் இருக்குமென்றும், தயாராகி கொள்ளுமாறும் கூறிச் சென்றான்.
ஆபரேஷன் தொடங்கியது. கொஞ்ச கொஞ்சமாக தொடையிலிருந்தும், இடுப்பிலிருந்தும் கொழுப்புகளை ஊசியின் மூலம்
உறிந்தெடுத்தான். பின்னர், அவைகளை மார்பு பகுதியில் வைத்து உட்செலுத்தி கொண்டிருப்பதை
க்ளோரோ பார்மின் மயக்கத்திலும் அவள் உணர்ந்தாள்.
மறுநாள் அனைத்து
பத்திரிக்கைகளிலும் ”சென்னையை சேர்ந்த மருத்துவர் சாதனை” என்பதுதான் தலைப்பு செய்தியாக இருந்தது. ஊரே அவரை கொண்டாடியது. விருதுகளும் பாராட்டுகளும் வந்து குவிந்த வண்ணம் இருந்தன.
நாட்கள் சென்றன…
ஒரு வருடத்திற்கு பின்னர்,
மார்முட்டி காம்பு கடித்து ”மொச் மொச்”சென்று பால் குடிக்கும் குழந்தையை மடியில்
கிடத்தியிருந்த அவள் தனது கணவனிடம்,
”யாருங்க அது யாழினி”?? என்று கேட்க நினைத்து,
”அன்னிக்கு எங்கிட்ட வரும்போது ஏன் அழுதிங்க” என்று கேட்டு முடித்தாள்.
இப்போது அவனுக்கு அந்த கதையை
அவளிடம் சொல்ல தோணியது.
--------------------------------------------
Comments
Post a Comment