விளிம்புக்கு அப்பால் சிறுகதை தொகுப்பை முன்வைத்து
நண்பர் சேகர் கேட்டிருந்தார் ஒரு சமூகத்தின், ஒரு பேரியக்கத்தின் ஒரே ஒரு கதையை மட்டும் மேலோட்டமாக மேய்ந்துவிட்டு 'கிளாரிட்டி' இல்லை என்று சொல்வது என்ன நியாயம் என்று??
நல்ல கேள்வி.
என்னை பொறுத்தவரையில் ஒரு சிறுகதையை ஒரு வாசகன் வாசிக்கிறான் என்றால் அது அவனுள் ஒரு திறப்பை ஏற்படுத்த வேண்டும் , வேறொரு மோனநிலைக்கு அழைத்து செல்ல வேண்டும் என்பதெல்லாம் இரண்டாவது, ஒரு புறம் இருக்கட்டும். முதலில் அந்த கதை அவனுக்கு புரியவேண்டும். அதன் மையத்தை அவன் உணர வேண்டும். அதை உணர்வதற்கும் கதையின் ஊடாக பயணிப்பதற்கும் எந்த ஒரு தடையும் (மொழி, கதை அமைப்பு ) இருத்தல் கூடாது. உதாரணமாக, பயணத்தில் இருக்கும் ஒருவன் பேருந்து நிலையத்தில் உள்ள பெட்டிக்கடையில் ஆ.வி வாங்குகிறான். அதில் ஒரு கதை வந்திருக்கிறது. கிட்டத்தட்ட இதே மாதிரியான கதை என்று வைத்துக்கொள்வோம், அவன் அகரமுதல்வனை அழைத்து "என்னய்யா இது, ஒண்ணுமே வெளங்கள" என்று கேட்பான். அவனிடம் போய் நீ, காசி ஆனந்தனையும், ஜெயபாலனையும் முத்துலிங்கத்தையும் போய் படித்த்துவிட்டு வா, அப்போதுதான் உனக்கு என் கதை புரியும் என்று சொன்னால் "போடா..நீயும் உன் கதையும்" என்று போய்விடுவான். அவனை மனதில் வைத்துதான் அதை சொல்லியிருந்தேன். அந்த அவன் நானாக கூட இருக்கலாம். (அதற்காக கதையின் தரத்தில் சமரசம் செய்துக்கொள்ள வேண்டும் என்று அர்த்தமல்ல). எழுத நினைக்கும் கதையை யார் படித்தாலும் புரியும்படி எழுத்துவதில்தான் எழுத்தாளனின் கெட்டிக்காரத்தனம் இருக்கிறது என்பது என் எண்ணம்.
இல்லை, என் கதையை இலக்கியவாதியாகவே பிறந்து நாடி, மூக்கு, கண்ணெல்லாம் இலக்கியம் பாய்ந்தோட வாழ்ந்துக்கொண்டிருப்பவன் படித்தால் போதும் என்று எழுத்தாளன் நினைத்தால் அந்த வரிகளை திருப்பி பெற்றுக்கொள்கிறேன்.
நன்றி.
-பிகு
Comments
Post a Comment