கண்ணம்மாக்களுக்கு பிடித்த ஏசப்பா - 2
நேற்று ஒரு பதிவு எழுதி இருந்தேன், ”கண்ணம்மாக்களுக்கு பிடித்த ஏசப்பா” என்று. ஆமாம் அது நடக்க கூடியதுதான். நானும் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கிறிஸ்துராஜா பள்ளியில் தான் படித்தேன். அங்கும் இதுபோன்ற நிகழ்வுகள் அடிக்கடி அரங்கேறும். ஆனால், யாரும் எவரையும் கட்டாயப்படுத்தமாட்டார்கள். அதிலும் குறிப்பாக மார்ச் மாதம் சூசையப்பருக்கு உகந்த்து என்று அந்த மாதத்தின் ஒவ்வொரு புதன் அன்றும் ’லாரன்ஸ் ஹால்’ பின்புறம் இருக்கும் சின்ன கிரவுண்டில் வழிபாடு நடக்கும். யாராவது ஒரு பாதிரியார் வந்து ஜெபம் செய்வார். ஏதேதோ பெரிய வாக்கியங்களாக சொல்லி இறுதியில் ”புனித சூசையப்பரே எங்களது மன்றாட்டை கேட்டருளும்” என்று சொல்ல சொல்வார்கள். அது ஏன் எதற்கென்றெல்லாம் தெரியாது; ஆனால், அது சொல்வதற்கு நன்றாக இருக்கும். (சொல்லிப்பாருங்கள் – புனித சூசையப்பரே எங்களது மன்றாட்டை கேட்டருளும் – நல்லா இருக்குல்ல??)
அதுமட்டுமல்லாது, பூசை முடிவில் அப்பமும் பழரசமும் தருவார்கள்; அதை ஞானஸ்நானம் பெற்றவர்கள் மட்டும்தான் வாங்கவேண்டும் என்று அழைப்பார்கள். அவசர அவசரமாக நெற்றியில் இருக்கும் திருநீத்து பட்டையை அழித்துவிட்டு அதை வாங்குவதற்கு ஓடுவோம். இதுமட்டுமில்லை, கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் (9 மற்றும் 10 வகுப்பு படிக்கையில்) காலை, மதியம் (2 முறை) மற்றும் மாலை என்று தினமும் நான்தான் தலைமையாசிரியர் அறையிலிருந்து மைக்கில் ப்ரேயர் சொல்வேன் (கொஞ்சம் தற்பெருமை பேசிக்கிறேன்). நான் சொல்ல சொல்ல ஒட்டுமொத்த பள்ளியும் பின்னால் சொல்லும். மேலும், ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை பள்ளி பேரவையில் ஸ்டேஜில் நின்று பேரவையை வழிநடத்த வேண்டும். அப்போதெல்லாம் ’பெலிக்ஸ்’ சார் தலைமையில் ஒரு கோஷ்டி, ”நெஞ்சே நெஞ்சே ஆண்டவரை வாழ்த்தி பாடுவாய்” என்று தேவனை துதிப்பாடுவார்கள். இப்போது எதற்காக இந்த சுயபுராணம் என்றால் என்னதான் திணித்தாலும் தன்விருப்பம் இல்லாமல் ஒருவனை எதற்குள்ளும் இழுத்துவிட முடியாது. இது மத்மென்று இல்லை அனைத்திற்கும் பொருந்தும்.
”விருப்பம் இருப்பவனே விரும்பி செல்வான்”
(இன்னொரு விஷயம் இப்போது நான் அந்த திருநீத்து பட்டையும் அணிவதில்லை)
இதை கதைக்களமாக கொண்டு ஒரு சிறுகதை எழுதியிருக்கிறேன்.
கதையின் தலைப்பு: மன்றாட்டை கேட்டருளும்!
-பிகு
21-05-2017
Comments
Post a Comment