ஊருக்குச் செல்லும் வழி - பதில் கடிதம்

அன்புத் தம்பிக்கு,

            வணக்கம், 
Image may contain: 1 person, beard and indoorஊருக்குச் செல்லும் வழி புத்தகம் குறித்தான உங்கள் பார்வையை மிகவும் ரசித்து வாசித்தேன். உங்கள் எழுத்தும் விமர்சனமும் எனக்குப் பிடித்திருக்கிறது. ஒரு விமர்சனத்தை எப்படி அணுகவேண்டும் என்கிற புரிதலோடுதான் உங்களது இந்தப் பதிவை வாசித்துமுடித்தேன். அதே புரிதலோடுதான் உங்களுக்கு இந்தப் பதில் பதிவையும் எழுதுகிறேன்.

கிராவுடைய வளர்ப்பு என்று நீங்களே சொல்லிவிட்டதால் என்னுடைய எழுத்தின் தளம் பற்றி நான் மேலதிக விபரம் ஒன்றும் சொல்லிக் கொள்ள வேண்டியிருக்காது. ஆனாலும் நாம் பேசுவதற்குச் சில விஷயமிருக்கிறது. கதை, கட்டுரை, என்ற இரண்டு வடிவங்களுக்குள்ளும் பொருந்தாத ஒரு வடிவத்தில் எழுதிய குறும்பேச்சாடல்களின் தொகுப்புத்தான்  இந்த ஊருக்குச் செல்லும் வழி.

ஊ. செ.வ -யில் என்ன எழுதியிருக்கிறீர்கள் என்று நம்மிடம் கேட்கிற நண்பர்களுக்கு வாசகர்களுக்கு, அதனை அறிமுகப் படுத்தும்போது, இது ஒரு கட்டுரைத் தொகுப்பு என்று சொல்லவேண்டியதன் நிர்பந்தத்தை நீங்கள் அறிந்திருக்கலாம். வாசிக்கிறவர்களுக்கு நம்முடைய படைப்பு எந்த ரீதியிலானது என்று குறிப்பு கொடுக்க அந்த சொல்லின் அடையாளம் எளிமையானது. அதன் மூலமாக அவர்கள் கவனத்தில் இந்த நூலை முன்வைப்பது எனக்கு வசதியாகிறது. மற்றபடி என் தளம் கதையாடல்வழியாக பேசுவதுதான். முன்னுரையில் குறிப்பிட்டதுபோல “ஒரு நாடோடியின் வாய்ச்சவடால்கள் தான் இந்தக் கட்டுரைகள் வேறெதுவும் இதில் அதிகமில்லை.” என்பதே இந்தப் புத்தகத்திற்கான நியாயம். 

கி.ரா தாத்தா சொல்லுவார், “ஆண்டு, மாதம், நாள் நேரமெல்லாம் சொல்லி வரலாற்றைச் சொல்லுறது நம்முடைய வேலையில்லை. அது வரலாற்று ஆய்வாளன் பண்ணுகிற வேலை” என்று. என் கருத்தும் அதேதான். நான் ஒரு கதைசொல்லியாக என்னை வெளிப்படுத்துகிறேன். கதையில்வருகிற காக்காய்க்கு பசி அடங்காது. பாட்டிக்கு வயது மூக்காது. காலமிருக்கிற வரைக்கும் வடையைச் சுட்டுக்கொண்டும் திருடிக்கொண்டும், நரியிடம் இழந்துகொண்டுமே இருக்கும். ஆக டீட்டெய்லிங்குக்காக மெனக்கிடுவதும் இல்லை. அதேசமயம் போகிறபோக்கில் அடிச்சுவிடுவதும் இல்லை. 

அடுத்ததாக, நான் தான் முகநூலில் நீங்கள் எழுதினதை வாசித்துவிட்டேனே பிறகு எதற்கு புத்தகமாகவும் போட்டுக்கொண்டு என்று கேட்டிருக்கிறீர்கள். இதேப்போல, முகநூல் எழுதியதை புத்தகமாக்குவதை  ஒருவிதமான தரம்குன்றிய படைப்பாகப் பார்க்கிற மனநிலையும் நம்மவர்கள்  பலபேரிடம் இருப்பதைப் பார்க்கிறேன். அது ஏனென்றும் தெரியவில்லை.  விகடனில் தொடராக வந்த பொன்னியில் செல்வனை இன்னும் அச்சுப்புத்தகம், ஆடியோ, வீடியோ, மேடை நாடகம், சினிமா முயற்சி என்று மாறி மாறி படைப்பாக்கிக் கொண்டிருக்கிறார்களே.. அது என்ன விதமான நியாயம்?

 எனக்கு எழுத்துச் சூழல் அறிமுகமானது மிகச் சில ஆண்டு இடைவெளிக்கு உள்ளேதான். அடித்தல் திருத்தல்களோடு எழுதத் தொடங்கி இருக்கிற ஆட்டக்காரன் நான். முகநூல் என்னுடைய  எளிய, அதேநேரம் பலப்பேரை சென்றடைய வாய்ப்புள்ள ஊடகம். இங்கே நான் என்னை மெருகேற்றிக் கொள்கிறேன். ஒரு வேடிக்கை பார்க்கிறவனாக இந்தச் சமூகத்தில் எனக்குக் கிடைத்த அனுபவங்களை என் வாழ்க்கையோடு பொருத்திப் பார்த்து, அவற்றை எழுத்துகளாக்கிப் பழகுகிறேன். வக்கீல்களையும், டாக்டர்களையும் கேளுங்கள். தங்கள் வேலையை எப்போதும் ப்ராக்டீஸ் செய்துக்கொண்டிருக்கிறேன் என்பார்கள். என் பானியும் அதுதான்.

திருவிழாவில் மிட்டாய்க்காரர் செய்து காட்டுகிற வாட்ச் பொம்மைகள் மாதிரி விதவிதமாய் எழுதிப் பார்க்கிறேன். அவற்றில் தேர்ந்தவற்றை தொகுக்கும்போது, எங்கே எது நம்மை சீர் பண்ணியிருக்கிறது. எது நம் காலை வாரி இருக்கிறது என்ற முடிவுகளுக்கு வர முடிகிறது. ஆக, எழுதின மொத்தத்தையும் அள்ளிச் சொருகி வைக்கோல் மூட்டையாக புத்தகம் போடுவதென்பது கிடையாது, தொங்குச்சதை இல்லாத அளவுக்கு வேலைபார்த்ததை மட்டும் கடைவிரிக்கிறேன்.

கூடவே, இணைய வாசிப்புக்கும், புத்தக வாசிப்புக்குமான வித்யாசத்தை உங்களுக்கு நான் பெரிதாக விளக்க வேண்டியதில்லை. கேட்ஜட் சமூகம் காலை பத்து மணிக்கு வாசித்த சில வரிகளைச் சிலாகித்து, அதிலிருந்து விடுபட ரொம்ப நேரம் ஆகாது. ஆனால் புத்தக வாசிப்பு அப்படி அல்ல. அதனாலே முகநூல் பக்கங்களை புத்தகமாக்குவதில் எந்த குற்றமும் இல்லை என்கிறேன். அதைக் காசுக்கு விற்காமல் மின் புத்தகமாகக் கொடுங்கள் என்கிறீர்கள். நாட்டில் இலவசங்களுக்கு ஒருக்காலும் மதிப்பு கிடையாது. மாறாக, புத்தக விற்பனையில் கிடைக்கிற தொகையெல்லாம் கோடிகளில் குவியும் வணிகமும் இல்லை தமிழ்ச்சமூகத்தில்.

 “அட்டையிலே போட்டுவிடுங்கள் இது முகநூல் பதிவுகள் என்று” உங்களுடைய இந்த தொனி எப்படியானது என்பதை என்னால் புரிந்துக் கொள்ளமுடிகிறது. ஏனைய்யா வாசித்ததையே வாசிக்கச் செய்து, வாசகனை வதைக்கிறீர்கள் என்று கேட்பதுபோல என் காதுகளுக்குப் பட்டது. என்னுடைய இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள வாய்ச் சவடால்களில் 30க்கு 20 இந்த சமூக ஊடகத்தில் எழுதினதுதான். ஆனால், அதில் ஏதோ ஒன்றாவது காலாவதியானதாகவோ, தேவையற்ற சொருகலாகவோ இருக்காது என்று நம்புகிறேன். அதை இன்னும் பலருக்கு புத்தக வடிவில் எடுத்துச் செல்கிறேன்.

 “வணங்கான் கதை’ இதை ஏற்கனவே அறம் தொகுப்பில் படித்திருப்போம். மீண்டும் எதற்கு இதிலும் எழுதியிருக்கிறார் என்று தெரியவில்லை” என்று எழுதி இருந்தீர்கள். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. நீங்கள் தான் இந்தக் கருத்தைக் குறிப்பிட்டிருந்தீர்களா என்று. ‘அறம் ஓர் வாசிப்பனுபவம்’ என்று அந்நூல் பற்றி வாசக மதிப்புரை எழுதின பிரவீன் குமாரை எனக்குத் தெரியும். அதைப் படித்துவிட்டு அந்தத் தொகுப்பை வாங்கத் துடித்த ராம்குமார் என்கிற முதலாமாண்டு கல்லூரி மாணவனையும் எனக்குத் தெரியும். வணங்கான் கதையை ஒரு கதைசொல்லியாக நான் இன்னும் சிலபேருக்கு எடுத்துச் சொல்ல நினைக்கிறேன். உண்மையில் வணங்கான் யார் என்பதைப் பற்றிய விவாதத்தை அதன் கடைசிப் பத்தியில் நான் பேசியிருக்கிறேன்.

தன் வரலாறு, சுய சரிதை என்றெல்லாம் பெரிய வார்த்தைகளுக்கெல்லாம் போகவேண்டாம். நான் எழுதிக் குவிக்கிறது வாழ்க்கையைத் தான். நான் வாழ்ந்த, கண்ட, கேட்ட மனிதர்களின் கதையை பதிவு செய்வதுதான் என்னுடைய அறம். அதில் நான் மட்டும் இல்லை. நானும் இல்லாமலும் இல்லை. அவற்றை வாசிக்கிறபோது கொஞ்சமும் சொல்வதற்குச் செய்திகள் இல்லாமல்  வெறும் பானையைச் சுரண்டிக் கொண்டிருக்கக் கூடாது என்பதிலும் தெளிவாக இருக்கிறேன்.

பத்திரிகைகளுக்கு எழுதி அனுப்புவதில்லை என்பது ஒரு கொள்கைசார் முடிவுதான். நமக்குள் இருக்கட்டும், தமிழின் பிரபலமான நாளேடுகளில் வாரம் ஒரு கட்டுரை வீதம், தகவல்களைத் தேடித் திரட்டி, பெரிய அரசியலாளர், முப்பது புத்தகம் போட்ட எழுத்தாளருக்கு இன்னைய தேதி வரைக்கும், எழுதிக்கொடுத்துக் கொண்டிருக்கிறேன். தவிர இதழியல் ஊடகங்களில் இரண்டு ஆண்டுகாலமாக பணி செய்து வந்திருக்கிறேன். இப்போது நீங்கள் பார்க்கிற இடத்தில் அல்ல.

ஆக, ஒரு காத்திரமான கட்டுரைக்கு எவ்வளவு மெனக்கிடல் வேண்டும் என்பதை அறிந்து, எழுதி, திருத்தி என்று இன்னொரு பக்க வேலைகளிலும் அனுபவம் கொண்டிருக்கிறேன். ஆக பத்திரிகை நம்மை மெருகேற்றும் என்பதிலெல்லாம் நீங்கள் நம்பிக்கை வைத்தால் அது தி.க.சி., தொ.மு.சி., காலத்தைய நம்பிக்கை. தவிர அங்கே கிடைக்கும் அங்கிகாரம் என்பது ஒரு வேடிக்கையான அரைக்கைச் சட்டை. எனக்கு இப்போதைக்கு அரைக்கை சட்டை மீது ஆசையில்லை.

ஊருக்குச் செல்லும் வழியை இன்னும் செம்மையாகச் செய்திருக்கலாம். ஆமாம் அதில் நிறைய சொதப்பியிருக்கிறேன். எழுத்துரு முதற்கொண்டு, எழுதியது, தொகுத்தது என்று நிறைய  மெருகேற வேண்டும். போகப் போக இன்னும் செம்மையாக்கிக் கொள்கிறேன். வளர்கிற பயிரப்பா நான். என்னைப் போய் நாஞ்சில் நாடன் கிட்டே எடுத்து வைத்தால் நான் என்ன செய்யட்டும் சொல். எனக்கு என்னை மாதிரி தான் எழுதவரும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, “எழுத்துக்காக பேசுவது மட்டுமே எழுத்தாளனுக்கு சரியான அங்கீகாரம்” என்று ஒரு போடு போட்டிருந்தாய் அல்லவா. அந்த ஒரு வார்த்தைக்குத்தான் இவ்வளவு நீளமாக எழுதிக் கொண்டிருக்கிறேன். உன்னுடைய இந்த வார்த்தை தான் என்னை உறங்கவிடாது. தூக்கத்தைக் கெடுக்கும். போட்டு படுத்தும். என்ன எழுதிக் கொண்டிருக்கிறேனென்பதின் மீது கவனம் பெற வைக்கும். தவிர முகஸ்துதிக்காக பாராட்டுவதற்கும் கொஞ்சம் தலையை ஆட்டித்தான் வைக்க வேண்டியிருக்கிறது. ஆனால், உன் மாதிரி விமர்சனத்திற்குத்தான் மனசு திறந்து பதில் எழுதவேண்டும் என்று தோன்றுகிறது.

-கார்த்திக் புகழேந்தி
06-03-2017

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

முள் - சாரு நிவேதிதா