கேன் வில்லியம்சன்-வெறுப்பேற்றுதல் - மீனின் சிறகுகள்

கேன் வில்லியம்சன்-வெறுப்பேற்றுதல் - மீனின் சிறகுகள்
----------------------------------------------------------------------------
இன்று காலை பேப்பரில், "வெறுப்படையும்போதுதான் அதிகம் கற்றுக்கொள்ள முடியும்" என்ற கேன் வில்லியம்சனின் பேட்டியை படிக்கும்போது "அட, ஆமாப்பா" என்று தோணியதன் விளைவுதான் இப்பதிவு.

நன்றாக கவனித்துப் பார்த்தால் இது புரியும். ஒருவர் நம்மை எந்த அளவுக்கு வெறுப்பேற்றுகிறாரோ அந்த அளவுக்கு நமக்குள் வெறி ஏற்படும், ஒரு சக்தி உருவாகும். அந்த சக்தியை, வெறியை அப்படியே நல்ல செயல்களுக்கு திருப்பிவிட்டால், முடியாது என்றெண்ணிய காரியமும் எளிதில் முடிந்துவிடும். சச்சின் பேட்டிங் செய்யும் போது இதைக் கண்கூடாக பார்க்கலாம்.
"மீனின் சிறகுகள்" நாவலில் ஒரு சம்பவம் வரும், விபத்தில் கால் இழந்த ஒருவனும் அவன் மனைவியும் வாழ்ந்து வருவார்கள் (பெயர்கள் மறந்துவிட்டன); அவர்களது தாம்பத்திய வாழ்வு அவளுக்கு திருப்திகரமானதாக இருக்காது.
ஒரு இரவுப் பொழுதில் அவள் குளித்து முடித்து சீவி சிங்காரித்து அவன் கண்ணில் படும்படியாக நிற்பாள்; அங்குமிங்கும் அலைவாள். ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாத அந்த கணவன் அவளை உறவுக்கு அழைப்பான். அவள் உடனே வராமல் அவனைக் கொஞ்சம் ஏங்க விடுவாள். கால் நடக்க முடியாத அவன், கைகளில் கிடைத்ததையெலாம் தூக்கி எறிவான். கோபத்தில் கெட்ட வார்த்தைகளை கொட்டுவான். அவனை கோபத்தின் உச்சத்துக்கு கொண்டு சென்று வெறுப்பேத்துவாள். பின்னர், பொறுமையாக அவனிடம் சென்று, உறவுக்கு இணங்குவாள். அவன் முழு வேகத்தோடும் வெறியோடும் அவள் மேல் உள்ள மொத்த கோபத்தையும் காட்டி இயங்கிக் கொண்டிருப்பான். அவனுக்குள் அந்த சக்தி, வெறி எங்கிருந்து வந்தது என்று அவனுக்கே தெரியாது. அந்த இரவு இருவருக்குமே திருப்திகரமாக முடிந்ததாக 'தஞ்சை ப்ரகாஷ்' கூறியிருப்பார். இந்த வெறுப்பேற்றுதல் என்பது உங்களிடம் உள்ள அத்தனை சக்தியையும் ஒன்றுதிரட்டி வெளிக்கொணர்ந்து செயல்பட வைக்கும்.
வெறுப்பேற்றுபவரை வாழ்த்துங்கள்!!!!
-தமிழ்மறவோன்

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

முள் - சாரு நிவேதிதா